ஐ.சி.சி., ஒரு நாள் போட்டிக்கான கனவு அணியில் இந்தியாவின் கபில் தேவ், சச்சின், சேவக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மெல்போர்னில் கடந்த 1971, ஜன. 5ம் தேதி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மோதிய முதலாவது ஒரு நாள் போட்டி நடந்தது. தற்போது ஒரு நாள் போட்டிகள் துவங்கியதன் 40 ஆண்டுகள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒரு நாள் அரங்கின் கனவு அணியை தேர்வு செய்ய, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) முடிவு செய்தது. இதற்காக முதலில் 48 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் இருந்து சிறந்த 11 வீரர்களை, ஐ.சி.சி., இணையதளம் மூலமாக ரசிகர்கள் தேர்வு செய்தனர். இதில், 97 நாடுகளை சேர்ந்த 6 லட்சத்துக்கும் அதிகமானோர் ஓட்டளித்தனர். நேற்று முடிவுகள் வெளியிடப்பட்டன. இதன்படி, 1983ல் இந்திய அணிக்கு உலக கோப்பை பெற்று தந்த கபில் தேவ் "ஆல்-ரவுண்டராக' இடம் பெற்றுள்ளார். துவக்க வீரர்களாக சச்சின், சேவக் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 48 பேர் பட்டியலில் இடம் பெற்றிருந்த இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் கும்ளே, ஹர்பஜன், தோனி, கங்குலி ஆகியோர் கனவு அணியில் வாய்ப்பு பெற இயலவில்லை.
கடந்த 2006ல் ஆஸ்திரேலியா(434), தென் ஆப்ரிக்கா(438/9), இடையே நடந்த பரப்பான மோதல், சிறந்த ஒரு நாள் போட்டியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஒரு நாள் அரங்கின் ஐ.சி.சி., கனவு அணி:துவக்க வீரர்கள்: சச்சின், சேவக்(இருவரும் இந்தியா)
மிடில் ஆர்டர்: வெஸ்ட் இண்டீசின் லாரா மற்றும் விவியன் ரிச்சர்ட்ஸ், பாண்டிங்(ஆஸி.,)
ஆல்-ரவுண்டர்- கபில் தேவ்(இந்தியா)
விக்கெட் கீப்பர்- கில்கிறிஸ்ட்(ஆஸி.,)
சுழற்பந்துவீச்சாளர்: முரளிதரன்(இலங்கை)
வேகப்பந்துவீச்சாளர்கள்: அக்ரம்(பாக்.,), மெக்ராத்(ஆஸி.,)டொனால்டு(தென் ஆப்ரிக்கா).
12வது வீரர்: மைக்கெல் பெவன்(ஆஸி.,)