Wednesday, April 11, 2012

டைட்டானிக் - புதைந்த வரலாறு













உலகை உருக்கிய வரலாற்றுச் சம்பவங்களில், முக்கியமானதாக டைட்டானிக் கப்பல் கவிழ்ந்ததும் கருதப்படுகிறது.
1912ம் ஆண்டு ஏப். 10ம் தேதி, தனது முதலும் கடைசியுமான பயணத்தை துவக்கிய இந்த கப்பலை நினைவு கூறும் விதமாக, உலகம் முழுவதும் நூறாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
பிரமாண்ட கப்பல்:
டைட்டானிக், வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் உள்ள ஹார்லாண்ட் மற்றும் ஊல்ப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய முதல் நீராவி ஆடம்பர கப்பல். 1909 முதல் மூன்று ஆண்டுகளுக்கு இக்கப்பலின் கட்டுமானப் பணிகள் நடந்தன. 882 அடி (269 மீ) நீளம், 175 அடி (53.3மீ) உயரம் 46328 டன் எடை, 9 தளங்களையும் கொண்டது. 2,435 பயணிகள், 892 பணியாட்கள் தங்கலாம். ஆபத்து காலத்தில் உதவும் வகையில், 20 லைப் படகுகள் இருந்தன. இவற்றின் உதவியுடன் 1,178 பேர் உயிர் பிழைக்கலாம்.
சம்பவத்தன்று...
1912, ஏப்.12ல் இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் துறைமுகத்திலிருந்து, நியூயார்க்கை நோக்கி, கேப்டன் எட்வர்டு ஸ்மித் தலைமையில், 2,224 பயணிகளுடன் தன் பயணத்தை துவக்கிய டைட்டானிக் கப்பல், ஏப்.14ம் தேதி நள்ளிரவு 11.40 மணிக்கு, அட்லாண்டிக் கடல் பனிப்பாறையின் மீது மோதியது. மீட்புப் படையினர் வருவதற்குள் 2 மணி 40 நிமிடங்களில் முற்றிலுமாக மூழ்கியது. கடலில் இருந்த திசை காட்டும் கருவி சரியாக செயல்படாததே விபத்திற்கு காரணம் என கப்பலில் பயணம் செய்த கேப்டனின் பேத்தி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இதில் பயணம் செய்த 1,514 பேர் இறந்தனர். மற்றவர்கள் லைப் படகுகள் உதவியுடன் தப்பித்தனர். கடலில் விழுந்தவர்கள் கடும் குளிர் (-2 டிகிரி செல்சியஸ்) காரணமாக உறைந்து இறந்தனர்.
வியாபாரமான டைட்டானிக்:
விபத்திற்குள்ளான கப்பலின் பாகங்கள் 12000 அடி ஆழத்தில் மண்ணில் புதைந்தன. 1985, செப்.1ல் அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பாலர்டு, பிரான்சை சேர்ந்த ஜீன் லூயிஸ் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வால் கப்பலின் உதிரிபாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த பாகங்களை எடுத்த போட்டோ ஒன்று மட்டுமே பல கோடிக்கு விற்பனையானது.
1997ம் ஆண்டு இச்சம்பவத்தை அடிப்படையாகவும் காதலை மையமாகவும் கொண்டு, ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் காமரூன், டைட்டானிக் என்ற படத்தை தயாரித்தார். கப்பலையும், விபத்தையும் நேரில் பார்ப்பதைப் போன்ற உணர்வை இந்த படம் ஏற்படுத்தியது. இப்படம் வசூலை வாரிக் குவித்தது மட்டுமல்லாமல் 11 ஆஸ்கர் விருதுகளையும் வென்றது. தற்போது, கப்பலின் நூறாவது ஆண்டை கொண்டாடும் வகையில், இந்த படம் மீண்டும் "3டி' தொழில்நுட்பத்தில் மாற்றி அமைக்கப்பட்டு, மீண்டும் வசூல் செய்கிறது.
டைட்டானிக் 2:
டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்தில் அஞ்சலி செலுத்தும் நோக்கில், "தி பால்மோரல்' என்ற கப்பல், நேற்று சவுத்தாம்டனிலிருந்து புறப்பட்டு டைட்டானிக் கப்பல் சென்ற அதே பாதையிலே பயணித்து ஏப்ரல் 15ம் தேதி விபத்து நடந்த இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த உள்ளது.

Friday, January 20, 2012

இந்திய ராணுவம்

இந்திய பாதுகாப்பு படைகளில், தரைப்படையே (ராணுவம்) பெரியது. எல்லைப் பாதுகாப்பு, உள்நாட்டு விவகாரங்கள், அமைதியை நிலைநாட்டல், பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவை இவற்றின் பணி. இது பாதுகாப்பு அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. ராணுவ தலைமையகம் டில்லியல் உள்ளது. 2010ம் ஆண்டு ஐ.ஐ.எஸ்.எஸ்.,(இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்டிராடர்ஜிங் மேனேஜ்மென்ட்) எடுத்த கணக்கெடுப்பின் படி, 1,129,900 பேர் செயல் நிலையிலும், 960,000 பேர் இருப்பு நிலையிலும் உள்ளனர். இந்திய ராணுவம், உலக அளவில் இரண்டாவது பெரிய தரைப்படையைக் கொண்டது. இந்திய ராணுவ தலைமை தளபதி, புனேவைச் சேர்ந்த விஜய் குமார் சிங்.

இந்திய ராணுவம் 6 படைப்பிரிவுகளை கொண்டது. அந்தந்த பகுதிக்கு ஏற்றவாறு படைப்பிரிவுகளை வழிநடத்துவதால் இவற்றை "கட்டளையகங்கள்' எனவும் அழைப்பர். "ஸ்டிரைக்', "ஹோல்டிங்', "மிக்ஸ்டு' என மூன்று வகை பிரிவுகள் உண்டு.
* மத்திய படைப் பிரிவு:
இது, உ.பி.,யில் உள்ள லக்னோவை தலைமையகமாக கொண்டது. இதன் தலைவர் (கமாண்டர் ஆப் சீப் - ஜி.ஓ.சி.,) ஓம் பிரகாஷ்.
பிரிவு I:
1965ம் ஆண்டு துவங்கப்பட்டது இப்பிரிவு. அதே ஆண்டு நடந்த இந்தியா-பாக்., போரில் இப்படையின் பங்கு அதிகம். இது சமீபத்தில் தென்மேற்கு படைப்பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டது. தற்போதைய படைத்தளபதி "லெப்டினன்ட் ஜெனரல் பிரகாஷ் சந்த்'.
* கிழக்கு படைப்பிரிவு:
கோல்கட்டாவை தலைமையகமாக கொண்டது. இதன் கீழ் மூன்று படைப்பிரிவுகள் அடங்கும். இதன் தலைவர் குல்திப் சிங் ஜம்வால்.
பிரிவு III :
1915ம் ஆண்டு, முதலாம் உலகப்போரின் போது வெள்ளையர்களால் அமைக்கப்பட்ட இந்த படை, இரண்டு உலகப் போரிலும் பங்கேற்றது. 198ல் இருந்து நாகலாந்தில் உள்ள திமாபூரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. தற்போதைய படைத்தளபதி "லெப்டினன்ட் ஜெனரல் என்.கே.சிங்.
பிரிவு IV:
1961ம் ஆண்டு துவங்கப்பட்ட இப்பிரிவு அசாமில் உள்ள தெஸ்பூரை தலைமையகமாக கொண்டுள்ளது. இதன் தற்போதைய தளபதி "லெப்டினன்ட் ஜெனரல் ஆர்.கே.கப்ரா.
பிரிவு XXXIII :
மேற்கு வங்கத்தில் சிலிகுரி என்ற இடத்தை தலைமையகமாக கொண்ட இப்பிரிவு 1962ம் ஆண்டிலிருந்து பயன்பாட்டில் உள்ளது. இதன் தற்போதைய தளபதி "லெப்டினன்ட் ஜெனரல் சி.கே.எஸ்.சாபு.
* வடக்கு படைப் பிரிவு:
காஷ்மீரில் உள்ள உதம்பூரை தலைமையகமாக கொண்டு செயல்படும் இந்த படைப்பிரிவின் கீழ் மூன்று பிரிவுகள் செயல்படுகின்றன. இதன் தலைவர் ஹர்சரண்ஜித் சிங் பனாக்.
XIV பிரிவு:
ஜம்முவில் உள்ள லே நகரை தலைமையகமாக பெற்ற இந்த பிரிவு 1999ம் ஆண்டு துவக்கப்பட்டது. அதே ஆண்டு நடந்த கார்கில் போருக்கு பின் அமைக்கப்பட்ட பிரிவு இது. இதன் படைத்தளபதி "லெப்டினன்ட் ஜெனரல்' ரேமண்ட் ஜோசப் நோரோன்ஹா.
XV பிரிவு:
1955ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த பிரிவு ஜம்முவில் உள்ள ஸ்ரீநகரை தலைமையகமாக கொண்டது. இதன் தற்போதைய படைத்தளபதியாக அமர்ஜித் சிங் சேகோன் இருக்கிறார்.
XVI பிரிவு:
1972ம் ஆண்டு ஜம்முவில் உள்ள நக்ரோடாவை தலைமையகமாக கொண்டு செயல்படும் இந்த பிரிவின் தளபதி "லெப்டினன்ட் ஜெனரல்' தெஜ் குமார் சப்ரூ.
* தெற்கு படைப்பிரிவு:
1895ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த படைப்பிரிவானது, சுதந்திரத்தின் போது இந்திய மாகாணங்கள் பிரிக்கும் போது முக்கிய பங்கு வகித்தது. தவிர, 1961ல் கோவாவை இணைக்கும் போதும், 1965 மற்றும் 1971ல் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரின் போதும் சிறப்பாக செயல்பட்டது. மகாராஷ்டிராவில் உள்ள புனேயை தலைமையிடமாக கொண்டுள்ளது. இதில் இரண்டு பிரிவுகள் உள்ளது. இதன் கமாண்டிங் பிரிவு பொது அதிகாரி (ஜி.ஓ.சி.,) நோபல் தம்புராஜ்.
XII பிரிவு:
1987ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த பிரிவு, ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரை தலைமையாக கொண்டது. இதன் தற்போதை படைத்தளபதி "லெப்டினன்ட் ஜெனரல்' சமீர் பால் சிங் தில்லான்.
XXI பிரிவு:
1990ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த பிரிவு, மத்தியபிரதேசத்தில் உள்ள போபாலை தலைமையகமாக கொண்டது. இதன் தற்போதை படைத்தளபதி "லெப்டினன்ட் ஜெனரல்' ராஜேந்தர் சிங்.
* தென்மேற்கு படைப்பிரிவு:
ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரை தலைமையகமாக கொண்டு 2004ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த படைப்பிரிவு, இந்திய படைப்பிரிவுகளில் சமீபத்தில் துவங்கப்பட்டது. இதில் இரண்டு பிரிவுகள் உண்டு. இதன் கமாண்டிங் பிரிவு பொது அதிகாரி (ஜி.ஓ.சி.,) பர்மேந்திர குமார் சிங்.
I பிரிவு:
1965ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த படைப்பிரிவு உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோவை தலைமையகமாக கொண்டது. அந்த ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் இந்த படையின் பங்கு அதிகம். இது சமீபத்தில் மத்திய படைப்பிரிவிலிருந்து இந்த பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டது. தற்போதைய படைத்தளபதி "லெப்டினன்ட் ஜெனரல்' பிரகாஷ் சந்த்.
X பிரிவு:
1970ம் ஆண்டு இறுதியில் துவக்கப்பட்ட இந்த பிரிவானது, பஞ்சாப்பில் உள்ள பாதின்டாவை தலைமையகமாக கொண்டுள்ளது. தற்போதைய படைத்தளபதி "லெப்டினன்ட் ஜெனரல்' சஞ்சீவ் ரா.
* மேற்கு படைப்பிரிவு:
1947ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ள இந்த படைப்பிரிவு, அரியானா மாநிலத்தில் உள்ள சந்திர்மந்திரை தலைமையிடமாக கொண்டது. இதன் கீழ் மூன்று பிரிவுகள் உள்ளன. இதன் கமாண்டிங் பிரிவு பொது அதிகாரி (ஜி.ஓ.சி.,) தல்ஜித் சிங்.
II பிரிவு:
அரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலாவை தலைமையிடமாக கொண்ட இந்த பிரிவு 1971 லிருந்து பயன்பாட்டில் <உள்ளது. இதன் படைத்தளபதி "லெப்டினன்ட் ஜெனரல்' ஏ.எஸ்.கப்வால்.
IX பிரிவு:
இமாச்சல்பிரதேசத்தில் உள்ள தர்மசீலா பகுதியை தலைமையாக கொண்டு 2005ம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இந்திய ராணுவத்தின் இளைய படைப்பிரிவு இது. இதன் படைத்தளபதி "லெப்டினன்ட் ஜெனரல்' ஏ.கே.சவுத்ரி.
XI பிரிவு:
பஞ்சாப்பில் உள்ள ஜலாந்தரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த பிரிவு 1948ம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் படைத்தளபதி "லெப்டினன்ட் ஜெனரல்' முனிஸ் சிபல்.
மேற்கூறிய படைப்பிரிவுகளை தவிர, இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் பயிற்சி அளிக்கும் படைப்பிரிவு உள்ளது.